Photobucket HOLY! HOLY! HOLY IS THE LORD OF HOST Photobucket

Monday, April 4, 2011

2011 ஏப்ரல் மாத வாக்குத்தத்தம்
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்கள் யாவரையும் வாழ்த்துகிறேன். கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து இந்த ஏப்ரல் மாதத்திலே நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்

"இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய்."  செப்பனியா 3:15

அன்பானவர்களே, தீங்குகளினால் மனம் நொந்து, துக்கத்தினால் சோர்ந்து போய் காணப்படுகிறீர்களோ? சங்கீதக்காரனாகிய தாவீது இப்படியாய் சொல்கிறார்,

"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறப்படியால் நான் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 16:8

ஆண்டவரை நீங்கள் எப்பொழுதும் முன்பாக வைக்க வேண்டும். உங்கள் இருதயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் கர்த்தர் நிச்சயமாய் உங்கள் தீமைகளை நன்மைகளாய் மாற்றுவார்.
பக்தனாகிய யோபு அநேக தீங்குகளை சந்தித்தவர் என்று வேதம் சொல்லுகிறது. தன்னுடைய சரீரத்தில் பாடுகள், குடும்பத்தில் அநேக உபத்திரவங்கள், நண்பர்கள் மூலமாய் அநேக நெருக்கங்கள், இப்படியாய் பல போராட்டத்தில் சிக்கித் தவித்தவர் பக்தனாகிய யோபு என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு கூறுகிறது.
ஆனாலும் அப்படிப்பட்ட  சூழ்நிலையிலும் யோபு இப்படியாய் சொல்கிறார்,
 "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைப்படாது,” என்பதை அறிந்திருக்கிறேன்"  யோபு 42:2
என்ன ஒரு நம்பிக்கை, எப்படிப்பட்ட விசுவாசம். இதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களிடத்திலும் என்னிடத்திலும் எதிர்ப்பார்க்கிறார். எப்படிப்பட்ட சீக்கலில் நீங்கள்  சீக்கிக் கொண்டிருந்தாலும் ஆண்டவரைப் பார்த்துச் சொல்லுங்கள், தேவரீர்  நீர்  சகலத்தையும் செய்ய வல்லவர் என்று, அதுதான் உங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும்,
உங்களுடைய ஒவ்வொரு விசுவாச அறிக்கையும் தேவனாகிய இயேசு கிறிஸ்து உங்களிடத்தில் கிரியை செய்ய வழி வகுக்கும்.
அன்பானவர்களே, அவிசுவாசி ஒருவன் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. அவனிடத்தில் தேவனுடைய கிரியைகளும் காணப்பட முடியாது. ஆகவே நீங்கள் சோர்ந்து போகாமல் விசுவாசமாய் இருங்கள். யோபின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசைப் பாருங்கள்,
"கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்." யோபு 42:12
கர்த்தர் நிச்சயமாய் உங்களையும் இப்படியாய் ஆசீர்வதிப்பார். உங்கள் முன்னிலைமையைக் காட்டிலும் கர்த்த்ர் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.
பயப்படாதிருங்கள், கர்த்தர் உங்கள் ஆக்கினைகளை எல்லாம் அகற்றி, உங்கள் சத்துருக்களை உங்கள் எல்லையை விட்டு முற்றிலுமாய் விலக்கி, உங்கள் நடுவிலே அவர் இருக்கிறப்படியினால் நீங்கள் இனித் தீங்கைக் காண்பதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே இந்த வாக்குத்தத்ததின்படியே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.